திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பகுதி பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசப்பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, காலை 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சொர்க்கவாசல் வழியாக பெருமாள் கோவிலை வலம் வந்தார். பின், பத்தி உலாத்தல் செய்யப்பட்டு, பெருமாள் ஸ்ரீபூமி, நீலாவுடன் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலங்குப்பம் பாண்டுரங்கன் கோவிலில் நேற்று காலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், சகஸ்ர நாம பூஜையும் நடந்தது. காலை 5:00 மணிக்கு வேதபிரபந்த சாற்றுமுறை செய்யப்பட்டு காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின் ராமர், சீதா, லட்சுமணருடன் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 6:00 மணிக்கு வீதியுலா நடந்தது. சி.மெய்யூர் அலர்மேல்மங்கா சமேத லட்சுமிநாராயணப்பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலை 5:00 மணிக்கு புண்ணியாகவாஜனமும் நடந்தது. காலை 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.