பதிவு செய்த நாள்
12
ஜன
2015
10:01
சபரிமலை: அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் ’பேட்டை துள்ளல்’ நிறைவு பெற்றது. இன்று பந்தளத்தில் இருந்து ஐயப்பன் திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில் ஜன.,14-ல் ’மகரவிளக்கு பெருவிழா’ நடக்க உள்ளது. இதற்காக கேரள உள்துறை அமைச்சர் சென்னித்தலா தலைமையில் பம்பையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்படி, ’மகர விளக்கு’ நாளில் 5000 போலீசாரும், கோட்டயம், பத்தனந்திட்டை, இடுக்கி மாவட்டங்களில் 4000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பேட்டை துள்ளல்:கார்த்திகை 1முதல் எருமேலியில் ’பேட்டை துள்ளல்’ நடந்து வருகிறது. இருந்தாலும் ’மகர விளக்கு’ பூஜைக்கு இரண்டு நாட்கள் முன் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் ’பேட்டை துள்ளல்’ பிரசித்தி பெற்றது. நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு வானில் வட்டமிட்ட கருடனை கண்டதும் பேட்டை ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் யானைகளுடன் ’பேட்டை துள்ளி’ வந்தனர். பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்த பின் பெருவழிப்பாதை வழி சபரிமலை சென்றனர். ஆலங்காடு பக்தர்கள் மாலை 3மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் ’பேட்டை துள்ளினர்’. இத்துடன் ’பேட்டை துள்ளல்’ நிறைவு பெற்றது.
திருவாபரணம் புறப்பாடு: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்படுகிறது. அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு இவை வைக்கப்படும். பிற்பகல் 12 மணிக்கு ’உச்சபூஜை’ க்கு பின் பேடகங்களில் அடைக்கப்பட்டு புறப்படும். இந்த திருவாபரண பவனி ஜன.,14 மாலையில் சன்னிதானம் வரும்.சன்னிதானத்தில் இன்று தீபாராதனைக்குப் பின் ’பிரசாத சுத்தி பூஜை’ நடக்கும்.