பழநி : ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பழநி மலைக் கோயிலில் நான்கு மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுபமுகூர்த்தம் நாள் என்பதால் வழக்கத்தை விட பழநிகோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் அடிவாரம் பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகளில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி பருவராஜகுல மக்கள் ஆயிரக்கணக்கில் மலைக்கோயிலில் குவிந்த காரணத்தால், பொதுதரிசன வழியில் செல்லும் பக்தர்கள் வெளிப்பிரகாரம்வரை வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அவதி: சுபமுகூர்த்த தினம் என்பதால் பழநி திருஆவினன்குடிகோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தது. போதிய போலீசார் இல்லாத காரணத்தாலும், கிரிவீதிகளில் ஆக்கிரமித்த கடைகளாலும், வாகன நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிபட்டனர். அதிக கூட்டம் காரணமாக வையாபுரி குளத்துரோட்டில் கார், பஸ்,வேன்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்தரோடு ஒருவழிபாதையாக மாற்றப் பட்டது. இருந்த போதும் நெரிசலை கட்டுப்படுத்தமுடியவில்லை.