பதிவு செய்த நாள்
10
பிப்
2015
11:02
சென்னை பொருட்காட்சி வளாகத்தில், பல்வேறு கோவில்களின் உற்சவர் புறப்பாடு நடத்த, அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு பல்வேறு ஆன்மிக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன.
சென்னை தீவுத்திடல் வளாகத்தில், 41வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பிலும், மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள் சார்பிலும், அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வகையில், இந்துசமய அறநிலையத் துறை சார்பில், பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு கோவில்களின் மாதிரிகள், பிரமாண்டமான சுவாமி படங்கள், சிலைகள் போன்றவை வைக்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்த அரங்கில் சுவாமி புறப்பாடு, இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சுவாமி புறப்பாடு: இது தொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி பிறப்பித்த உத்தரவு: பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள, அறநிலையத் துறை அரங்கை சிறப்பாக்கும் வகையில், விடுமுறை நாட்களில் சுவாமி புறப்பாடு நடத்தப்படும். ஜன., 18, 25, பிப்., 1, 8, 15, 22, மார்ச், 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில், பொருட்காட்சி வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடத்தப்படும். இதற்கு, தங்கசாலை ஏகாம்பரேசுவரர் கோவில், காளிகாம்பாள் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், முண்டகக் கண்ணியம்மன், மாதவ பெருமாள், கந்தசுவாமி கோவில், ராயப்பேட்டை சித்தி புத்தி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 11 கோவில்களின் சுவாமிகள் புறப்பாடு நடத்த, ஒத்துழைப்பு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாதவ பெருமாள்: இதன்படி, நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை மாதவ பெருமாள் கோவில் உற்சவர், கோவிலில் இருந்து வாகனத்தில் தீவுத்திடலில் உள்ள பொருட்காட்சி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, புறப்பாடு நடத்தப்பட்டது. பொருட்காட்சி வளாகத்தில், கிழக்கில் உள்ள பிரதான வாயிலில் இருந்து, மேற்கில் உள்ள விழா மேடை வரை, சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்; அப்போது பக்தர்களுக்கு, கல்கண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதிருப்தி: கோவில் உற்சவரை, வேறு ஒரு இடத்தில் புறப்பாடு நடத்துவதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன. இதுகுறித்து, ஆலய வழிபடுவோர்
சங்கத்தின் செயல் தலைவர், டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: பொருட்காட்சி வளாகத்தில், அறநிலையத் துறை சார்பில் அரங்கு அமைத்து, திட்டங்களை விளக்குவது சரி. அதற்காக, உற்சவரை கொண்டு சென்று புறப்பாடு நடத்துவது, அதிருப்தி அளிப்பதாக அமைந்துள்ளது. கோவில்களில், எந்த இடத்தில் இருந்து, எந்தெந்த பகுதி வழியாக உற்சவர் புறப்பாடு, ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதற்கு, ஆகம அடிப்படையிலான விதிகள் உள்ளன. கோவிலுக்கு தொடர்பில்லாத ஒரு பகுதிக்கு, உற்சவரை கொண்டு சென்று புறப்பாடு நடத்துவது, ஆகம விரோத செயலாகும். இத்தகைய செயல்களில் ஈடுபட, அறநிலையத் துறையினருக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.