கோவளம்: கோவளம் கனகவள்ளி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கோவளத்தில் புகழ்பெற்ற கனகவள்ளி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பராமரிப்பின்றி சிதிலமடைந்து வந்தது.
கோவிலை பராமரிக்க, கடந்த 2012ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை 13வது நிதிக்குழு மானியமாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து, அறநிலையத்துறை மானியம் உபயதாரர்கள் நன்கொடை மூலம் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் நிறைவை தொடர்ந்து, நேற்று காலை 6:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விமானங்களில் கலச நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது, பக்தர்கள், நமசிவாயா... கைலாசநாதா... என மெய்சிலிர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபதுாப ஆராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.