பதிவு செய்த நாள்
10
பிப்
2015
01:02
அவிநாசி : பக்தர்களின் "ஓம் நமசிவாய கோஷத்துக்கு மத்தியில், மாதவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ள மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. நேற்று காலை 6:00க்கு நிறைவு கால பூஜை துவங்கியது. பூஜிக்கப்பட்ட கலசங்களை, சிவாச்சாரியார்கள் பிரகார உலாவாக எடுத்துச் சென்று, 9:40க்கு, ஏக காலத்தில் மாதவனேஸ்வரர், மங்களாம்பிகை, நிருருதி விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரஹங்களுக்கும், கோபுரங்களுக்கும், மூலவ மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் செய்தனர். விழாவை காண திரண்டிருந்த பக்தர்கள், "ஓம் நமசிவாய என கோஷம் எழுப்பி, பக்தி பரவசம் அடைந்தனர்.
அதன்பின் தச தானம், தச தரிசனம், மஹா தீபாராதனை நடைபெற்றது.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, மங்களாம்பிகை சமேத மாதவனேஸ்வர சுவாமி பிரதோஷ வழிபாட்டு மன்றம், சேக்கிழார் புனிதர் பேரவை, திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கமிஷனர் சேஷசாய் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மண்டல பூஜை, 12 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.