கோடை விடுமுறையை சமாளிக்க தயராகிறது திருமலை தேவஸ்தானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2015 11:02
திருமலை : வருகின்ற ஏப்ரல்,மே மாத கோடை விடுமுறைக்கு திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர இப்போது முதலே திருமலை தேவஸ்தானம் தயராகிவருகிறது. மலை வாசஸ்தலமான திருமலைக்கு மத்திய தர வகுப்பினர் ஆன்மீக சுற்றுலா போல வருவதால் அவர்கள் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கீடு செய்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளப்படுகிறது. முன் கூட்டியே அறைகள் ரிசர்வேஷன் செய்யாமல் வரக்கூடிய பக்தர்கள் அறைகள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் அறைகள் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியாமல் நின்று கொண்டு இருப்பார்கள்.
இனிமேல் அனைவரும் கேட்கும் படியாக அவ்வப்போது அறைகளின் காலி எண்ணிக்கை அறிவிக்கப்படும்.இதன் மூலம் வரிசையில் நிற்பவர்கள் தமக்கு அறைகள் கிடைக்குமா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும். இதே போல திருமலைக்கு வரக்கூடியவர்கள் பெரிதும் பராட்டுவது இங்கு பராமரிக்கப்படும் சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழலைத்தான்.இதற்கு காரணமான சுகாதாரதுறை கோடை காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படும் அதற்கேற்ப கழிவு நீர் குழாய்கள் தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. சர்வதரிசனம் எனப்படும் இலவச தரிசனம் காணும் பக்தர்களுக்கு கூடுதலாக இரண்டு லட்டு வழங்கப்படுவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது கோடை விடுமுறையில் குவியும் பக்தர்களுக்கு அதிக சந்தோஷத்தை தரும்.