பதிவு செய்த நாள்
31
மார்
2015
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஏழாவது நாளான நேற்று, காலை 6:00 மணியளவில், ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் மலர் அலங்காரத்தில், கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். காலை 7:15 மணியளவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து, பிற்பகல் 12:55 மணியளவில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. சிவ பக்தர்கள், சிவபுராண பாடல்களை பாடி, தேருக்கு முன்பாக சென்றனர். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, ராஜவீதிகளை வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.