பதிவு செய்த நாள்
31
மார்
2015
11:03
புதுச்சேரி: புதுச்சேரியின் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி ரூ. 6 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, கோவில் விசாலமார்க்கப்பட்டு, வலதுபுறம் முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டாலும், எந்தவித நெரிசலும் இல்லாமல், சுவாமி தரிசனம் செய்ய முடியும். அழகிய முறையில் புதிதாக உற்சவர் மண்டபம், சுவாமிக்கு திருமண வைபவ மண்டபம், கண்ணாடி பள்ளியறை அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரக விமான ஸ்தூபி கலசம், சொர்ண மயமான ஆனந்த விமான நிலையமாகவும், பாலவிநாயகர், பாலசுப்ரமணியர். ரஜத பந்தன விமானம், ஸ்தூபி கலசம் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகரை சிரமமின்றி வழிபட வசதியாக, பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 3ம் தேதியன்று, காலை 8.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி, சபா நாயகர் சபாபதி, தொகுதி எம்.எல்.ஏ.,வும், திருப்பணிக்குழு கவுரவத் தலைவருமான லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக பூஜைகள் துவங்கிய தினத்தில் இருந்து, தினமும் மாலையில் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (31ம் தேதி) தவில் வித்வான் பொன் சண்முகம் மற்றும் குழுவினரின் மேள வாத்திய கச்சேரி, ஏப்ரல் 1ம் தேதியன்று, ராஜேஷ் வைத்தியாவின் வீணை கச்சேரி, 2ம் தேதி, ஓ.எஸ். அருணின் வாய்ப்பாட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் உறுப்பினர்கள், கோயில் நிர்வாக அதிகாரி கருணாகரன், திருப்பணிக்குழு செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்தரங்க ரவிச்சந்திரன், உறுப்பினர் பரசுராமன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.