பதிவு செய்த நாள்
05
மே
2015
02:05
இஸ்லாமின் கொள்கைகளை பரப்புவதற்கு நபிகள் நாயகம் கடும் சிரமங்களைச் சந்தித்தார். மக்கா மற்றும் தாயிப் நகர்களில் அவர் சொல்லடி மட்டுமல்ல... கல்லடியும் பட வேண்டியிருந்தது. ஒருமுறை, அவர் தாயிப் நகரில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு கூட்டத்தினர், இறைவன் உம்மை நபியாக அனுப்பியதாக கூறுகிறீரே! உம்மைத் தவிர அவருக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? என்று கேலி பேசினர். நாயகம் அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர் அவர் மீது கல்லெறிந்தனர். அப்போதும் நாயகம் ஒன்றும் சொல்லவில்லை. ஒருகட்டத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறவே, அவர் சோர்வடைந்து தரையில் அமர முயன்றார். அப்போது ஒரு கொடியவன் ஓடிவந்து அவரை அமர விடாமல் தடுத்து, துõக்கி நிறுத்தினான். நாயகம் அங்கிருந்து செல்ல முயன்றார். கூட்டத்தினர், அவரைத் தடுத்து தொடர்ந்து கல் வீசினார்கள். ஒரு வழியாக நாயகத்தின் நண்பரான ஸைத், அவரைத் தப்ப வைத்து, நகருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அங்கே நாயகம் வேதனை தாளாமல் சாய்ந்து விட்டார். நாயகத்தின் வேதனையைப் பொறுக்க மாட்டாத ஸைத், அண்ணலே! உங்களைக் கல்லால்அடித்த பாவிகளுக்குசாபம் கொடுங்கள். அவர்கள் அழிந்து போகட்டும் என இறைவனை வேண்டுங்கள், என்றார். ஆனால் நாயகமோ, ஸைத்..அப்படி பேசாதீர்கள். நான் மக்களை சபிக்கவோ, அழிக்கவோ இந்த உலகத்திற்கு வரவில்லை. அவர்களது அறியாமையால் இத்தவறைச் செய்கிறார்கள். இப்போது இவர்கள் திருந்தா விட்டாலும், இவர்களின் தலைமுறையாவது திருந்தும், என்றார் பெருந்தன்மையுடன்! பிறகு இறைவனை நோக்கி கையேந்தி, இந்த மக்கள் அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்து விடு. உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் பாதுகாவலாக இல்லை, என்றார். நாயகத்தைபோல, நமக்கும்பெருந்தன்மையும், பொறுமையும் இருக்க வேண்டும்.