பதிவு செய்த நாள்
14
ஜூலை
2015
10:07
அவனியாபுரம்: மதுரை அனுப்பானடியில் திருடு போன பழமை வாய்ந்த நடராஜர், சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலைகள் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டன. தனியார் பராமரிப்பில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன. அங்கிருந்த மூலவர்கள் நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகள் ஜூன் 27ல் திருடு போனது. நேற்று காலை அவனியாபுரம் ஸ்டேஷனுக்கு போனில் பேசிய ஒருவர், மண்டேலா நகர் ஒத்தையடி பாதை புதருக்குள் இரு சுவாமி சிலைகள் கிடக்கின்றன என்றார். சிலைகளை மீட்ட துணை கமிஷனர் உமையாள், உதவி கமிஷனர் ஜோஸ் தங்கையா, இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சேதுமணிமாதவன், அவற்றை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். இதை அறிந்த மக்கள், ஸ்டேஷனில் இருந்த சுவாமியை தரிசித்தனர். பின், கோர்ட்டில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. பொதுமக்கள் கூறுகையில், சுவாமி சிலைகள் திருடு போனது குறித்து தினமலர் நாளிதழ் படம், செய்தி வெளியிட்டது. அதைக்கொண்டு போலீசில் புகார் செய்தோம். சிலைகள் மீண்டும் கிடைக்க உதவிய தினமலர் நாளிதழுக்கும், போலீசாருக்கும் நன்றி என்றனர்.
பிரதோஷமும் அபிஷேகமும்: நேற்று, பிரதோஷம் என்பதால் சிலைகளுக்கு, போலீசார் அபிஷேகங்கள் நடத்தினர். சிலைகள் இருந்த அறையில் காலணியுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் மிக பக்தியுடன் சிலையை பாதுகாத்தனர்