பதிவு செய்த நாள்
28
ஜூலை
2015
10:07
ஆர்.கே.பேட்டை:ஆடி பொங்கல் திருவிழாவை ஒட்டி, வெள்ளாத்துாரம்மன் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன. பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில், வெள்ளாத்துாரம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரளான பக்தர்கள், ஆடி மற்றும் தை மாதங்களில், குடும்பத்தினருடன் வந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆடி மாதம் பொங்கல் திருவிழாவை ஒட்டி, நேற்று, இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 10:30 மணிக்கு, கிராம எல்லையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் புறப்பட்டது. காலை, 11:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டது. பிற்பகல், 3:00 மணியளவில், மூலவர் அம்மனுக்கு மகா படையல் வைத்து, பக்தர்கள் வழிபட்டனர். கோவில் நந்தவனத்தில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் வைத்தனர்.