பதிவு செய்த நாள்
05
ஆக
2015
11:08
உடுமலை: ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. படகுத்துறையில் நடந்த விழாவிலும் மக்கள் குவிந்தனர். உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள, திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இப்பகுதியை மேலும் மேம்படுத்தவும், ஆடிப்பெருக்கு தினத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் கடந்த, 2013ல், முதன் முதலாக ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது. இந்தாண்டுக்கான இத்திருவிழா, திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில், படகுத்துறைக்கு அருகில் உள்ள மைதானத்தில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று நிறைவடைந்தது. மைதானத்தில், மாவட்ட சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறைகள் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இருநாட்களும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக பாடல்கள், நாட்டியங்கள், வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று முன்தினம் காலை, மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிற்பகல், 3:00 மணிக்கு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் வேலுமணி, பல்துறை பணி விளக்க கண்காட்சியை திறந்து வைத்து, 825 பயனாளிகளுக்கு, 1.51 கோடி ரூபாய்க்கான, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெங்கடாச்சலம், கலைக்குழுவினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். எம்.எல்.ஏ., சண்முகவேலு, கோட்டாட்சியர் சாதனைக்குறள் உள்ளிட்ட இந்து அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாள் விழா, நேற்று காலை, 9:30 மணிக்கு, மங்கள இசையுடன் துவங்கியது. பள்ளி மாணவர்கள் மற்றும் நடனக்குழுவினர்கள் பங்கேற்ற, விநாயகர் பக்தி பாடல்கள், யோகா, சீதா கல்யாணம், ஜிக்காட்டம், கிராமிய கலை பாடல், பரதநாட்டியம், கிராமிய நடனம், தப்பாட்டம், மைமி, நாட்டுப்புற பாடல்கள்-நடனம், தஞ்சாவூர் உருமி மேளம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடந்தன.
பிற்பகல் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 489 பயனாளிகளுக்கு, 1.66 கோடி ரூபாய்க்கான உதவிகள் வழங்கப்பட்டது. தாசில்தார் சைபூதீன் நன்றி தெரிவித்தார். கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்:ஆடிப்பெருக்கு முன்னிட்டு, கடந்த இருநாட்களாக, திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளன. உடுமலை மட்டுமின்றி பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். முக்கிய விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். ஆடிப்பெருக்கு முன்னிட்டு, கடந்த இருநாட்களாக, இங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருவோர் மற்றும் இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், நடந்த ஆடிப்பெருந்திருவிழாவுக்கு வருவோர் என, மக்கள் கூட்டம் திருமூர்த்திமலை பகுதியில் அதிகம் காணப்பட்டது.