பதிவு செய்த நாள்
05
ஆக
2015
11:08
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு ஆக., 8 முதல் 18 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மதுரை கலெக்டர் சுப்ரமணியன் அறிவிப்பு:ஆடி அமாவாசை விழா ஆக.,14ல் நடக்கிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆக.,8 முதல் 18 வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வத்திராயிருப்பு, மகாராஜபுரம் சந்திப்பு, மந்தித்தோப்பு, தாணிப்பாறை ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவர். ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, டி.கல்லுப்பட்டி, மதுரையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோயில் வளாகத்தில் ஜெனரேட்டர் மூலம் மின் விளக்கு வசதி, தாணிப்பாறையில் இருந்து மலைக் கோயில் வரை ஐந்து இடங்களில் வில்போன் மூலம் தகவல் தொடர்பு வசதி, முக்கிய இடங்களில் ரோப் வசதி, குளியல் அறைகள், கழிப்பறைகள், தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று, சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சன்னதி எதிரே உள்ள புதிய பாதை வழியாக வெளியே வந்து, சந்தன மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, இரும்பு பாலத்தின் வலதுபுறமாக கீழே இறங்கிச் செல்ல வசதியாக ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக், பாலிதீன் கொண்டு செல்லக்கூடாது, என்றார்.