செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மழை மற்றும் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் 15 நிமிடங்களில் நடந்து முடிந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்தனர். அதிகாலை முதல் பொங்கல் வைத்து, மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்த ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். 14ம் தேதி மாலை 7 மணி முதல் மழை விட்டு விட்டு பெய்தது. அத்துடன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இதனால் வழக்கமாக 12 மணிக்கு நடக்க வேண்டிய ஊஞ்சல் உற்சவத்தை 10.50 மணிக்கு துவங்கினர். மழை வரும் சூழல் இருந்ததால் 11.05க்கு உஞ்சல் உற்சவத்தை முடித்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதன், உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர்கள் குழு தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர், மேலாளர்கள் முனியப்பன், மணி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.