மலைவாசி ஒருவன், முதல்முறையாக ஒருநாள் அடிவாரத்திற்கு வந்தான். அவனை அவனது நண்பன் பல இடங்களுக்கும் அழைத்து சென்றான். கடைசியாக அவர்கள் கடற்கரைக்கு வந்தனர்.கடலைப் பார்த்ததும் மலைவாசிக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவன் அதுவரையிலும் கடலைப் பார்த்ததே இல்லை. முதலில் அவனுக்கு பயமாக இருந்தாலும் கடல் அலைகள் அவனது பாதத்தை வருடியதும் பரவசம் அடைந்தான். தண்ணீரில் குதித்து மகிழ்ந்தான். சிறிது நேரம் குளிக்கவும் செய்தான். கடலின் முடிவில் வானமும் கடலும் சேர்வது போன்ற தோற்றம் இருந்தது. வானம் எப்படி கடலோடு இணைகிறது என ஆச்சரியமாக கேட்டான். இவ்வளவு தண்ணீர் இங்கே எப்படி வந்து தேங்கியது என சிந்திக்க ஆரம்பித்தான். எல்லாமேபுரியாத புதிராக இருந்தது.நீண்ட நேரமாக கடலின் அழகை ரசித்துவிட்டு, ஒரு சின்ன ஜாடியில் கடல் நீரை ஊற்றி நிரப்பினான். அதைப்பார்த்த நண்பன், ஏன் தண்ணீரை நிரப்புகிறாய்? எனக் கேட்டான்.கடல் என்றால் என்னவென்றே தெரியாத என் மனைவி, குழந்தைகளுக்கு இந்த தண்ணீரை கொண்டு போய் காட்டப்போகிறேன், என்றான்.இதுபோல, உலகத்தில் உள்ள அனைவருமே, கடவுளை மிகச்சிறியவராக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஜாடி கடல் நீர் கடலாகிவிட முடியாது. பரிசுத்த ஆவியான கடவுளும் கடலை போன்றவர். அவரை நமது குறுகிய அறிவால் புரிந்துகொள்ள முடியாது. அவரைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும், எவ்வளவுதான் பேசினாலும் அது கடல் தண்ணீரை ஜாடியிலே மொண்டு கொண்டுபோன கதையாகத்தான் இருக்கும்.கடவுளை புரிந்துகொள்வது என்பது மிகவும் அரிதான செயல்.