பதிவு செய்த நாள்
28
டிச
2015
04:12
விநாயகரை பிரம்மச்சாரியாகவே பல தலங்களில் வழிபட்டாலும், அவர் மனைவியருடன் காட்சிதரும் தலங்களும் உள்ளன. விநாயகரின் திருமணம் நடைபெற்ற தலமாக திருவலிதாயம் குறிப்பிடப்படுகிறது. சம்பந்தர் திருவலிதாய தலத்திற்கு வந்து, வலிதாய நாதரை வணங்கி மனமுருகிப்பாடிய தேவாரத்தில், இந்த கோயில் வழிபாட்டின் பலன்களைக் கூறியுள்ளார். திருவலிதாயநாதரை வழிபட்டால் துன்பமும் வருத்தமும் விலகிவிடும். ஞானமும் புகழும் உண்டாகும். வாழ்க்கைத்தரம் உயரும். நம்மை எல்லாரும் பெரியவர்கள் என மதிப்பார்கள். அத்துடன் சொர்க்கப்பதவியும் கிட்டும் என பாடியுள்ளார் சம்பந்தர்.
திருவலிதாயத்தை பல சிவத்தலங்கள் மாலைபோல சுற்றிஅமைந்துள்ளன. அம்மாலையின் நடுவே மாணிக்கம்போல் மின்னுகிறது இத்தலம். மயிலாப்பூர், திருவான்மியூர், திருவேற்காடு திருவிற்கோலம், திருமுல்லைவாயில், திருஇலம்பயக் கோட்டூர், திருஊறல், திருவாலங்காடு, திருவொற்றியூர் ஆகிய தலங்கள் சுற்றியுள்ளன. குரு பகவான் திருவலிதாயநாதரை வழிபட்டு அருள்பெற்றார். இதுபோல மேலும் அவர் தென்குடித் திட்டை, திருச்செந்தூர் தலத்தையும் வழிபட்டு பலன்பெற்றுள்ளார். திருவலிதாயம் சென்னையின் தென்குருத்தலம் எனப்போற்றப்படுகிறது. இத்தனை சிறப்பிற்கும்மேல் இத்தலத்தில்தான் பிள்ளையாரின் திருமணம் நடந்துள்ளது.
பிரம்மனின் மகள்கள் கமலையும் வல்லியும் வலிதாயநாதரை வேண்டித் தவமிருந்தனர். அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் காட்சிதந்து என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். சுவாமி நாங்கள் இருவரும் இணைபிரியா சகோதரிகள் நாங்கள் கடைசிவரை ஒற்றுமையாக இருக்க, எங்கள் இருவருக்கும் ஒரே கணவர் வேண்டும் என வரம் கேட்டனர். சிவன் அப்படியே வரமளித்தார். கஜமுகாசுரனின் அட்டகாசம் அதிகமானது அவன் எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதென வரம்பெற்றவன். அவனை சம்ஹாரம் செய்ய தன் மகன் பிள்ளையாரை அனுப்பி வைத்தார் ஈசன். பிள்ளையார் எந்த ஆயுதமும் இல்லாமல் தன் ஒரு தந்தத்தையே உடைத்து கஜமுகாசுரனை வதம் செய்தார். அப்போது கஜமுகாசுரன் பெருச்சாளி வடிவெடுத்தான். அதற்கு விநாயகர் ஞானம் போதித்து தன் வாகனமாக்கிக்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும் ஈசன் விநாயகருக்கு அந்த இரு சகோதரிகளையும் மனைவிகளாக்க எண்ணி திருமண ஏற்பாடுகள் செய்தார்.
ஈசன் ஆணைப்படி விநாயகர் கமலை, வல்லி இருவரையும் திருவலிதாயத்தில் பார்வதி, பரமேஸ்வரன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். பின் நாங்கள் மூவரும் வலிதாயத்திலேயே தங்க அருள்புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டு அங்கேயே தங்கி விட்டார். இக்கோயில் கி.பி. 7- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கருவறையில் தானே உருவான லிங்க வடிவில் வலிதாயநாதர் வல்லீஸ்வரர் என்ற பெயரோடு அருள்புரிகிறார். கருவறை முன்னுள்ள மண்டபத்தில் நின்று நேராகப் பார்த்தால் வலிதாயநாதரை வணங்கலாம். வலப்புறம் திரும்பிப் பார்த்தால் இறைவி ஜகதாம்பாள் என்ற தாயம்மாவையும் தரிசிக்கலாம். அப்படியே அண்ணாந்து மேலே பார்த்தால் சக்கர வடிவில் அஷ்டலட்சுமிகள் மண்டப விமானத்தில் அருள்வதைக் காணலாம். பிராகாரம் சுற்றிவந்தால் மனைவிகளுடன் விநாயகர், துணைவிகளுடன் முருகர், குருபகவான், மகாவிஷ்ணு, துர்க்கை, பிரம்மா, நடராசர், நவகிரகங்கள் என எல்லா சன்னிதிகளையும் வழிபடலாம். வியாழனன்று குரு பகவானை இந்த குரு ஸ்தலத்தில் வழிபட்டுப் பலன் பெறலாம். சென்னை கோயம்பேட்டுக்கு அருகே, பாடி என்று அழைக்கப்படும் பகுதியில் இத்தலம் உள்ளது.