பதிவு செய்த நாள்
29
டிச
2015
02:12
சேவை மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குரு நன்மை தரும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. இந்த ஆண்டின் தொடக்கமும் இறுதியும் சிறப்பாக அமையும். மத்திய பகுதி சுமாராக இருக்கும். முக்கிய கிரகங்களில் ஒன்றான குருபகவான் தற்போது 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவர் பலவிதத்திலும் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் வளர்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். புதிய பதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5 மற்றும்7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலமும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். 5-ம் இடத்துப் பார்வை மூலம் எடுத்த காரியத்தில் வெற்றிகளைத் தருவார். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 7-ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் மேம்படும்.
இன்னொரு முக்கிய கிரகமான சனி பகவான் தற்போது 7-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். அவரால் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். சனிபகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார். இந்த கிரகநிலைகளின் அடிப்படையில் பொதுவான பலனை காணலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பிப்ரவரி 7-ந் தேதி முதல் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை வீண் விவாதத்தை வளர்த்து கொள்ளாமல் இருப்பது நல்லது. செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. நவம்பருக்குப் பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். விருந்து, விழா என சென்று வரலாம். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவர். தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
தொழில், வியாபாரம்: லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். ஏப்ரல் முதல் ஜூலை வரை தொழிலில் முதலீட்டை அதிகரிக்கலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை மறையும். வேலையின்றி இருப்பவர்கள் சுயதொழில் ஆரம்பிக்க யோகமுண்டு. வேண்டாதவர்களின் அடாவடி போக்கால் பணத்தை இழக்க வாய்ப்புண்டு.
பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் குருபலத்தால் நல்ல வளம் காணலாம். பதவி உயர்வு கிடைக்க பெறுவீர்கள். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் வெளியூர், வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், பிப்ரவரி முதல் ஜூலை வரை வேலைப்பளு அதிகரிக்கும். கடன் போன்ற கோரிக்கைகள் நிறைவேற தாமதம் ஆகும். ஜூலைக்குப் பிறகு நிலைமை சீராகும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள், இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
கலைஞர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். ஆனால், பிப்ரவரி 7-ந் தேதிக்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெற வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். ஆகஸ்டில் இருந்து நல்ல
பணப்புழக்கம் இருக்கும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். மார்ச் முதல் செப்டம்பர் வரை செவ்வாயால் புதிய பதவி கிடைக்கலாம்.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனை பெறுவர். தேர்வில் தேர்ச்சியும், நல்ல மதிப்பெண்களும் பெறலாம். ஆனால், அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஜூன், ஜூலையில் புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி உண்டு.
விவசாயிகள்: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நெல், கேழ்வரகு, பழ வகைகள், சோளம் போன்ற வற்றின் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும். ஜூலை வரை நவம்பருக்கு பிறகு எள், உளுந்து, கொள்ளு, பனை போன்றவற்றில் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள்: வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் பெறலாம். உங்களை புரிந்து கொள்ளாத பிறந்த வீட்டார், இனி படிப்படியாக உங்களை புரியும் நிலை ஏற்பட்டு உங்களிடமே தஞ்சம் கொள்ளும் நிலை உருவாகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு சென்று
வருவீர்கள். ஏப்ரல் முதல் ஜூலை வரை கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
பரிகாரம்: நிழல் கிரகங்களான ராகு கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள்.
செல்ல வேண்டிய கோவில்: கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் துர்க்கை கோவில்