மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) + பணம் உங்கள் பையில் - வம்பு உங்கள் வாயில்! (100/75)
பதிவு செய்த நாள்
29
டிச 2015 02:12
இளமை நினைவுகளை என்றும் மறக்காத மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் நட்பு கிரகமான சனிபகவான் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்துச் செல்வார். குருபகவான் 4-ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். அவரால் மன உளைச்சலும், உறவினர் வகையில் வீண் பகையும் உருவாகலாம். ஆனால், அதைக்கண்டு கவலை கொள்ள வேண்டாம். பிப்ரவரி முதல் ஜூலை வரை, குரு வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் கெடுபலன்கள் வராது. சனிபகவான் 6-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இங்கு அவர் நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவார். மேலும், சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும்.
அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழில் விருத்தியைத் தந்து நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். இவர் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் விருச்சிக ராசிக்குள்ளேயே இருப்பதால், பலன்களில் குறையிருக்காது. சனி, குரு, ராகு, கேது ஆகிய முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலன்களை இனி காணலாம். தேவையான பொருளாதார வளம் இருக்கும். எடுத்த காரியம் நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கேதுவால் மனைவி வகையில் சிற்சில பிரச்னைகள் வரலாம். வம்பு பேசும் வாயை அடக்கி சற்று விட்டுக்கொடுத்து போனால் பிரச்னைகளை தவிர்த்து விடலாம். ஆக.1க்கு பிறகு கருத்து வேறுபாடு படிப்படியாக குறையும். திருமணம் தாமதம் ஆகலாம். குருவின் வக்கிர காலத்தில் குடும்ப நிலைமை மேம்படும்.
தொழில், வியாபாரம்: நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கேதுவால் பணவிரயம் ஆகலாம் என்பதால், யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். காய்கறி, தானியம், பாத்திர வியாபாரம் நன்றாக வளர்ச்சி அடையும். இரும்பு வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையுடனும் இருக்கவும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை புதிய வியாபாரம் துவங்க வேண்டாம்.
பணியாளர்கள்: வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் வேலையில் பிரச்னை இருக்காது. அதன்பிறகுள்ள காலத்தில், மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியிருக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு குரு வக்கிர காலம் உன்னதமாக இருக்கும். மே மாதத்திற்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களை அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி கடும் முயற்சியின் பேரில் கிடைக்கும். எனினும், பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
மாணவர்கள்: சுமாரான நிலையில் இருப்பர். தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும்.
விவசாயிகள்: மிக கடுமையாகக உழைக்க வேண்டி இருக்கும். ஜூலை முதல் நெல், சோளம் கொள்ளு, எள், பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்போர் மன நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர். வழக்கு விவகாரங் களில் முதல் ஆறுமாதம் வரை விசாரணை நீடித்து கொண்டே போகும். ஜூலைக்கு பிறகு சாதகமான நிலை ஏற்படும்.
பெண்கள்: பிள்ளைகளால் பெருமை காணலாம். வீடு, வாகனம், புத்தாடை, நகை, ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அபார ஆற்றலுடன் திகழ்வீர்கள். சுக்கிரனால் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு ஆடை மற்றும் கல்வி உதவி நிதி வழங்குங்கள். திங்கள்கிழமைகளில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
செல்ல வேண்டிய கோவில்: திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்.
|