பதிவு செய்த நாள்
01
ஜன
2016
12:01
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம் 13 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஜன., 20 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பழமையான கோவில்:விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வைப்பாற்று கரையில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் 1996 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கோயில் பழமையான நிலையில் இருந்தது.
புனரமைப்பு பணி: இப்பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியுடன் மீனாட்சி சுந்தேரஸ்வரர் டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கோயில் புனரமைப்பு பணிக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றனர். அதன் படி 2012 அக்., மாதம் சுவாமி, அம்பாள், பரிவார தேவதைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு 13 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதில் அனைத்தும் கற்களால் அமையும் வண்ணம் கோயில் அமைக்கப்பட்டு வந்தது. இதில் சுவாமி சன்னிதி முன்பாக 5 நிலைகள் கொண்ட 70 அடி ராஜகோபுரமும், அம்பாள் சன்னிதி முன்பு 3 நிலைகளில் 50 அடி உயரம் கொண்ட தெற்கு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. கன்னிமூல கணபதி, முருகன், வள்ளி, தெய்வாணை, பெருமாள், லட்சுமி,ஐயப்பன்,சரஸ்வதி, சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், நவக்கிரகங்கள், துர்க்கை உள்ளிட்ட 14 உப சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம், மகாமண்டபம்,திருக்கல்யாண மண்டபம்,ஊஞ்சல் மண்டபம்,மடப்பள்ளி, பள்ளியறை உள்ளிட்டவைகள் அனைத்தும் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்திலும் கலை நயமிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இறுதி கட்ட பணி: இப்பணியின் நிறைவாக வண்ணம் தீட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இங்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடத்தப்படும், அனைத்து விழாக்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகம்: தற்போது கும்பாபிஷேகம் ஜன.,20 ல் நடக்கவுள்ளது. இதற்காக யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேக தினத்தில் பக்தர்களுக்கு இலவச வாகன வசதியும், ஒரு லட்சம் பேருக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் 10 இடங்களில் சிறப்பு அன்னதானம் நடக்கவுள்ளது.