பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
பெ.நா.பாளையம்: “இவ்வுலகில் ஒழுக்கத்துடன் வாழ்பவர்களை, உலகம் போற்றும்,” என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். கோவை மருதமலை ரோடு, நியூ தில்லை நகர், ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் கோவை பக்தி சொற்பொழிவு மன்றம் சார்பில், வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ஒழுக்கத்தோடு வாழ்பவர்கள், எந்த குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், போற்றப்படுவர். இதற்கு ஆழ்வார்கள், மகாத்மா காந்தி உள்ளிட்டோர் உதாரணம். இவ்வுலகில் ஆச்சர்யம் என்னவென்றால் வாழ்க்கை நிலையற்றது என தெரிந்தும், நிலையானது என நினைத்து கொள்வதுதான். எமதர்மன், தர்மபுத்திரரிடம், இறந்து கிடக்கும் நான்கு தம்பிகளில் யாரை உயிர்பிக்க வேண்டும் என கேட்கிறார்.
நகுலனை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்கிறார் தர்மபுத்திரர். குந்திதேவி பெற்ற பிள்ளைகளில் நான் ஒருவன் உயிருடன் இருக்கிறேன். என் சின்னம்மா பெற்ற பிள்ளைகளில் ஒருவரும் இல்லை. அதனால் அவர் பெற்ற நகுலனை உயிர்ப்பிக்க வேண்டும் என, அதற்கான காரணத்தையும் கூறுகிறார். அவருடைய சகோதரத்துவத்தை பாராட்டிய எமதர்மன், பாண்டவர்கள் நால்வரையும் உயிர்ப்பிக்கிறார். தர்மனிடம் இருந்து நாம் சகோதரத்துவத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார். வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு ஜன., 14 வரை தினமும் மாலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணிவரை நடக்கிறது.