பதிவு செய்த நாள்
06
ஜன
2016
11:01
திருச்சி: தமிழக கோவில்களில் அமலுக்கு வந்த, ஆடை கட்டுப்பாடு குறித்து வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், முக்கிய கோவில்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வேஷ்டி, சேலை அணிந்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. இதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று, தடை விதிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து கோவிலுக்கு வந்தவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அதன் பின், கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் மற்றும் மலைக்கோட்டை கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினருக்கு, அவர்களுடன் வரும், கைடுகள், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆடைக் கட்டுப்பாடு பற்றி எடுத்துக் கூறுகின்றனர். அதன்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தடை விதிக்கப்பட்ட ஜீன்ஸ், லெக்கிங்ஸ், சார்ட்ஸ், டி- - சர்ட் போன்ற ஆடைகளை தவிர்த்து, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.
ஸ்ரீரங்கத்துக்கு வந்த இத்தாலி, இஸ்ரேல் நாட்டினர், தமிழக பாரம்பரிய ஆடை அணிவது பற்றி கூறியதாவது: இந்த கோவிலுக்கு வந்த போது, ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு மதிப்பளித்து, தமிழக பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலைகளை அணிந்து கொண்டோம். இவை, எங்களுக்கு வசதியாகவும், பெருமிதமாகவும் உள்ளது. எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பெண்கள் அமைப்பு மேல்முறையீடு: உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி, அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து வரும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆண் பக்தர்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, உடலை மறைக்கும் துண்டு, பேன்ட், சட்டை, பெண் பக்தர்கள் சேலை, தாவணி, சுரிதார், துண்டு, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். ஆடை கட்டுப்பாட்டை 2016 ஜன.,1 முதல் அனைத்து இந்து கோயில்களிலும் அமல்படுத்த, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அறநிலையத்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சரிகா தாக்கல் செய்த மனு: பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அவர்களின் வழிபாட்டுரிமை பாதிக்கப்படும். கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில், அந்தந்த கோயில் பழக்க, வழக்கப்படி ஆடைகள் அணிய வேண்டும், என உள்ளது. பல்வேறு கலாசாரத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வருவர். ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனு செய்துள்ளார். இரு மனுக்களும், விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.