பதிவு செய்த நாள்
29
ஜன
2016
04:01
மற்ற தெய் வழிபாட்டுக்கும் பிள்ளையார் வழிபாட்டுக்கும் வேறுபாடு உண்டு. குறிப்பாக மற்ற தெய்வங்களுக்கான கோயில் அமைப்பு, பூஜா வழிமுறைகள் போன்றவற்றில் உள்ள கடுமையான விதிமுறைகள் பலவும் பிள்ளையாருக்குக் கிடையாது. பிள்ளையாரை எங்கும் பூஜிக்கலாம், எப்படியும் பூஜிக்கலாம், எப்போதும் பூஜிக்கலாம், யாரும் பூஜிக்கலாம், எதனாலும் பூஜிக்கலாம், எதிலும் பூஜிக்கலாம். மேலும், குறிப்பாக மற்ற தெய்வங்களை பஞ்ச உலோக விக்ரஹங்கள், தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம் முதலியவைகளால் செய்யப்பட்ட பிரதிமைகள், சிலைகள், வரைபடங்கள், கலசம் போன்றவற்றில் மட்டுமே பூஜை செய்ய முடியும். ஆனால், விநாயகரையோ மேற்கூறிய அனைத்திலும் பூஜிப்பதுடன் மஞ்சள் பொடியில், பசுஞ்சாணியில் மண் பிம்பத்தில் முழுத் தேங்காயில் கொட்டை பாக்கில் என எதிலும் பூஜை செய்யலாம். அதிலும் மஞ்சள் பொடியில் பிள்ளையாரை பூஜை செய்வது அதிக பலனையும் அதிக ஸான்னித்யத்தையும் அளிக்கும்.
விநாயகரின் அவதாரத்தைச் சொல்லும் பல நூல்களில் முத்கல புராணம் என்னும் நூலும் ஒன்று. அதில் கூறப்படும் செய்தி இது. ஒரு சமயம் கைலாசத்தில் பரமசிவனின் மனைவி உமா தேவியார், ஸ்நானம் செய்வதற்காகப் புறப்பட்டாள். எப்போதும், உமாதேவியார் குளிக்கும்போது குளியல் அறையின் வாயிலில் சில பெண்கள் காவல் இருப்பது வழக்கம். ஆனால் அன்று காவல் காக்கும் பணிப்பெண்ணைக் காணவில்லை. எனவே, உடல் முழுவதும் மஞ்சள் பொடியைப் பூசிக்கொண்டு குளிக்கத் தயாராக இருந்த உமாதேவி, தாம் பூசிக் கொண்டிருந்த மஞ்சள் பொடியை தனது கையால் வழித்து எடுத்து, அவற்றை ஓர் உருண்டயாக உருட்டி, அதைக் கண், காது, மூக்கு, வாய், முகம் முதலியவற்றுடன் ஓர் மனித உருவமாகச் செய்தாள். அத்துடன் அந்த பிம்பத்துக்கு உயிரையும் தந்து, அதையே குளியறை வாயிலில் காவலுக்காக அமர்த்திவிட்டு குளிக்கச் சென்றாள்.
மஞ்சள் பொடியால் செய்யப்பட்ட அந்த உருவமும் அங்கே வாயில் காவல் காத்து யாரையும் உள்ளே வரவிடாமல் தடுத்ததுடன், மேலும் பல இன்னல்களையும் விலக்கியது. அதனால் மகிழ்ச்சியடைந்த பார்வதி தேவி அதை தன்னுடனேயே வைத்துக் கொண்டு, தனது பிள்ளையாகவே பாவித்து அன்பு செலுத்தினாள். பெரிய இடத்துப் பிள்ளை என்னும் ஸ்தானத்தைப் பெற்ற பிள்ளையாருக்கு அனைவரின் அன்பும் ஆதரவும் கிடைத்தது. அது முதல் அனைவராலும் பிள்ளையார் என அழைக்கப்பட்டு, முதன் முதலில் பூஜிக்கும் தெய்வமாகவும் வழிபாடு செய்யப்பட்டார்.
அது முதல் பூலோகத்திலும் பிள்ளையாரை மஞ்சள் பொடியில் ஆவாஹனம் செய்து பூஜிக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஆகவே பஞ்சலோக விக்ரஹம், தங்கத்தாலான விக்ரஹத்தை விட, மஞ்சள் பொடியில் ஆவாஹனம் செய்து பூஜிப்பதே விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது. விரைவில் பலனைத் தரக் கூடியது. விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் பிள்ளையாரை செய்து பூஜித்தாலும் கூட, அதற்கு முன்பாக மஞ்சள் பொடியில் பிள்ளையாரை பூஜித்து விட்டு, அதன் பின்னரே மண் பிள்ளையாரை பூஜிக்க வேண்டும் என்கிறது கல்ப பிரயோகம்.