பழநி: சேலம் மாவட்டம் இடைப்பாடி பர்வதராஜகுல மக்கள் காவடிகளுடன் பழநி கோயிலில் குவிந்தனர். பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த ஏராளமானோர் சில நாட்களுக்கு முன்பு கிளம்பினர். இவர்கள் மயில், இளநீர் காவடிகளுடன் நேற்று மானுார் சண்முகநதி ஆற்றில் கூடினர். பின்பு கும்பகோணம் காவடிகளுடன் ஒன்றுகூடி காலை 7 மணிக்கு காவடிகளுக்கு மகாபூஜை செய்தனர். பக்தர்கள் காலை 11 மணிக்கு பழநியை வந்தடைந்தனர். மலைக்கோயில் தங்குதல்: பழநியில் மாலை 3 மணிக்கு மேல் காவடிகள் முத்திரை செலுத்தி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இடைப்பாடி பருவதராஜகுல காவடி கமிட்டியினர் சார்பில் உச்சிகால அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக் குழுவினர் படிகளில் சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் வெளிப்பிரகாரத்தில் மல்லிகை, செவ்வந்தி, ரோஜா, அரளி, தாமரை உள்ளிட்ட வண்ணப்பூக்களால் ரங்கோலி வரைந்தனர். மாலை 5.30 மணிக்கு சாயரட்ச பூஜை, ராஜஅலங்கார முருகன், தங்கரதத்தில் சின்னக்குமாரர் தரிசனம் ஆகியவை முடித்து. இராக்கால கட்டளை பூஜையில் சுவாமி தரிசனம் செய்து நேற்றிரவு மலைக்கோயிலில் தங்கினர்.