வடமதுரை: வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் 75வது ஆண்டாக, மூவாயிரம் கிலோ அரிசியில் புளியோதரை தயாரித்த கிராம மக்கள் திருவிழா போல, சமபந்தி போஜனம் நடத்தினர். மதுரை மாவட்டம் அழகர்கோவிலை அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரை வந்தார். பின்னர் காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் மகத்துவம் இருப்பதாக எண்ணி அவர் மீது பக்தி கொண்டு, ‘கள்ளியடி சுவாமிகள்’ என அழைத்தனர். அவரும் கிராமத்தில் தங்கி கிராம நலனுக்காக நல்ல காரியங்களை செய்து வந்தார். 21-1- 1941ல் மகாசமாதி அடைந்த அவரது நினைவாக இங்கு கோயில் கட்டியுள்ள கிராம மக்கள், ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் நடத்துகின்றனர். 75-வது ஆண்டாக நேற்று நடந்த சமபந்திக்கு 3025 கிலோ அரிசி, 350 கிலோ புளியம் பழம், 240 கிலோ நிலக்கடலை பருப்பு பயன்படுத்தி புளியோரை தயார் செய்தனர். சுற்றுப்பகுதி கிராம மக்கள், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கில் கோயில் முன்பும், தெருக்களிலும் வரிசையாக தரையில் அமர்ந்தனர். சிறப்பு வழிபாடு முடிந்ததும், இளைஞர்கள் ஒருசேர அனைவருக்கும் இலையும்,தொடர்ந்து புளியோதரை பிரசாதமும் வழங்கினர். இப்பணி முடிந்ததும் அனைவரும் ‘அரோகரா’ கோஷத்துடன் கலைந்து சென்றனர்.