பதிவு செய்த நாள்
11
பிப்
2016
03:02
மகாமகத்தன்று மகாமக குளக்கரைக்கு கும்பகோணத்திலுள்ள 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருள்வர். அந்தக் கோவில்களில் முதலிடம் முடிப்பது ஆதிகும்பேஸ்வரர் கோவிலின் கும்பேஸ்வரர். மகாமக விழாவின் கதாநாயகரான கும்பேஸ்வரரும், அவரது நாயகியும் சக்தி பீடங்களின் தலைவியுமான மங்களாம்பிகையையும் தரிசிக்க நகரின் நடுநாயகமாக வீற்றிருக்கும் கும்பேஸ்வரர் கோயிலுக்கு செல்லவேண்டும்.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில் நுõல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார்.
இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. வெள்ளத்தின் வேகத்தால் உரி ஒரு பக்கமும், வில்வம் மறுபக்கமும், தேங்காய் இன்னொரு பக்கமுமாக சிதறி விழுந்தன. பின்பு அந்தக்குடம் ஒரு இடத்தில் தங்கியது. கும்பத்திலிருந்து விழுந்த மாவிலை வன்னி மரமாயிற்று. அப்போது சிவன் துõரத்தில் இருந்து ஒரு பாணத்தை எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நாற்புறமும் பரவியது. அமுதத்தில் நனைந்துகிடந்த வெண்மணலை வாரி கும்பத்தில் சேர்த்தார் சிவன். அமுதத்தோடு கலந்த வெண்மணல் சிவலிங்க வடிவமாயிற்று. இவ்வாறு கும்பத்தில் தோன்றியதால் இவர் கும்பேஸ்வரர் எனப்படுகிறார். காலப்போக்கில் கும்பேஸ்வரருக்கு கோயில் கட்டப்பட்டது. கோயிலை வலம் வரும் முறை: மகாமகத்திற்கு கும்பகோணம் செல்லும் பக்தர்கள் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அவசியம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது ராஜகோபுரம் வழியாக நுழைந்து, மிக நீண்ட மண்டபத்தை கடந்து பலிபீடத்தையும், கொடிமரத்தையும் வணங்கி, வாசலில் உள்ள நந்திதேவரிடம் அனுமதி பெற்று கோயிலுக்குள் நுழைய வேண்டும். சுவாமி சன்னதியில் கும்பேஸ்வரரை வணங்கியபிறகு வெளியேறி முதல் பிரகாரத்திலுள்ள 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வலிங்கம், ஈசானலிங்கம், பசுபதிலிங்கம், ருத்ரலிங்கம், உக்ரலிங்கம், பீமலிங்கம், மகாலிங்கம், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசிக்க வேண்டும். சற்று தள்ளி வந்து வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும்.
பின்னர் பிட்சாடணர், வள்ளி தெய்வானை சமேத முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டு அம்மன் சன்னதியை அடைய வேண்டும். அம்பாள் மங்களாம்பிகையை ஆத்மார்த்தமாக தரிசிக்க வேண்டும். அம்பாள் சன்னதியின் கோஷ்டத்தில் ஸ்ரீ உமாதேவியை தரிசிக்கலாம். அம்பாள் தரிசனத்தை முடித்து கண்ணாடி அறையில் இறைவன் பள்ளிகொண்டுள்ள காட்சியைக் கண்டு, அம்பாளுக்கு இடதுபுறமுள்ள அஷ்டபுஜ துர்க்கையை வணங்கி, அருகிலுள்ள நவநீத விநாயகரை தரிசிக்க வேண்டும். பின்பு கிராதமூர்த்தி, பைரவர், காலபைரவர், ஜுரகேஸ்வரர், சாஸ்தா, மகான் கோவிந்த தீட்சிதர், நாகாம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும். இதன்பிறகு நவக்கிரக மண்டபத்தை சுற்றி கோயிலிலிருந்து வெளியேற வேண்டும்.
தல சிறப்பு: விநாயகருக்கும் முருகனுக்கும் நாரதர் கொடுத்த ஞானப்பழத்தை பெறுவதற்காக போட்டி ஏற்பட்டது. உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கே ஞானப்பழம் என சிவன் அறிவித்தார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்த விநாயகபெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து பழத்தை பெற்றார். சிவனையும் அம்பிகையையும் வலம் வந்தால் உலகையே வலம் வந்ததாக அர்த்தம் என்பதை நிரூபிக்கும் வகையில், இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பு குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டுமே இருக்கும். இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. வெண்மணலால் செய்யப்பட்டவர் என்பதால் திருமஞ்சனமே சார்த்தப்படும். லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் ஒன்று இருக்கிறது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.
சக்தி பீடங்கள் 51ல் இது முதன்மையானது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடியபிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடவேண்டும். நவகன்னியரான நதிகள் மகாமக குளத்தில் நீராடிவிட்டு பொற்றாமரை குளத்திலும் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். ஆதிசித்தர்கள் 64 பேரில் இவரே முதன்மையானவர்.
விழாக்கள்: பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பதிருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ. துõரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனியில் பங்குனித்திருவிழா மற்றும் வழக்கமான விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் உண்டு. மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம்நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிகம், மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும்.
மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்திலேயே மிகப்பெரிய விழா இதுதான். இங்கு குவியும் கூட்டத்திற்கு நிகராக வேறு எந்த கோயில் விழாவிற்கும் கூட்டம் வருவதில்லை.
இருப்பிடம்: தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் நகரின் நடு நாயகமாக அமைந்துள்ளது.
தொடர்புடைய கோயில்கள் :