சில பெண்கள் வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும். சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் புத்திர பாக்கியம் இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் தள்ளிப்போகும். இப்படி பெண்களுக்கான பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கென்றே மகாமக குளத்தின் கரையில் ஸ்பெஷல் கோயில் ஒன்று இருக்கிறது. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்து நவகன்னியரை வழிபட்டால் இந்த பிரச்னைகளுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு: அயோத்தி மன்னன் ராமன் தன் மனைவி சீதையை பிரிந்து தவித்தார். ராவணனை கொல்வதற்காக இலங்கை செல்லும் வழியில் தனது இயல்பான குணம் மாறி ருத்ராம்சம் பெற இத்தலத்திற்கு வந்து அகத்திய மாமுனிவரை வேண்டினார். குடந்தையில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என அகத்தியர் மொழிந்தார். ராமனும் இங்கு தங்கி ருத்ராம்சம் ஆரோகணிக்கப்பெற்றார். எனவே இத்தலம் காரோணம் என்றும் அழைக்கப்படுகிறது.
நவ கன்னியர்களான கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகியோர் தங்களிடம் மக்கள் தொலைத்த பாவங்களை போக்கிக்கொள்ளும் வழி தெரியாமல் கயிலை சென்று சிவபெருமானை வணங்கினர். மகாமக தினத்தன்று கும்பகோணம் சென்று புனித நீராடினால் உங்கள் பாவம் நீங்கும் என சிவன் கூறினார். அவ்வாறே ஒன்பது கன்னிகளும் மகாமக குளத்தில் புனித நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கேயே அமர வேண்டும் என வேண்டினர். இறைவனும் அதற்கு அனுமதித்தார். இப்போதும் ஒன்பது கன்னிகளின் பிரம்மாண்டமான சிலைகள் இத்தலத்தில் உள்ளன.
சிறப்பம்சம்: நவகன்னியரை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து பூஜித்து வந்தால் வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தலத்தில் உள்ள க்ஷேத்திரலிங்கம் அதிக உயரம் உள்ளதாகும். ஒரு வேப்ப மரத்தின்கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேப்பமரத்தின்கீழ் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகளே அமைக்கப்படும். இங்கு சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். இவர்களைத் தவிர சப்த மாதர்கள், பைரவர், சூரியன், சந்திரன், ஜேஷ்டாதேவி, லிங்கோத்பவர், ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி, தெட்சிணாமூர்த்தி ஆகியோரும் காட்சியளிக்கின்றனர். நவகன்னியர்களின் பாவம் போக்க காசியிலிருந்து இறைவன் இங்கு வந்து குடிகொண்டதால் காசி விஸ்வநாதர் என பெயர்பெற்றார். அம்பாள் விசாலாட்சியும் இறைவனுடன் இங்கு தங்கியுள்ளார்.
திருவிழா: மாசி மகத்தை ஒட்டி பத்துநாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.
இருப்பிடம்: மகாமக குளத்தின் வடக்கு கரையில் மிக உயர்ந்த ராஜகோபுரத்துடன் கம்பீரமாக இக்கோயில் அமைந்துள்ளது.