பதிவு செய்த நாள்
11
பிப்
2016
04:02
உலகிலேயே மிகப்பெரிய பாவம் பசுவைக் கொல்வதுதான். அறிந்தோ, அறியாமலோ பசுவுக்கு தீங்கிழைத்திருந்தால் கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள கவுதமேஸ்வரர் கோயிலுக்கு சென்றுவர வேண்டும்.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில் நுõல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார். இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. கும்பத்தில் சுற்றப்பட்டிருந்த பூணுõல் அறுந்து விழுந்தது. அது லிங்கமாக மாறியது. உபவேதநாதேஸ்வரர் என சிவன் பெயர்பெற்றார்.
பசு தோஷம் நீக்கும் தலம்: கவுதமர் இப்பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார். அவரது புகழை குறைப்பதற்காக சில எதிரிகள் மாயப்பசு ஒன்றை உருவாக்கி ஆசிரமத்திற்கு அனுப்பினர். அதை வாஞ்சையோடு கவுதமர் தடவிக்கொடுத்தார். திடீரென அந்த பசு மறைந்துவிட்டது. மாயப்பசுவாயினும்கூட ஒரு பசு மறைவதற்கு காரணமாக அமைந்துவிட்டோமே என வருந்திய முனிவர் இங்கிருந்த உபவேத நாதேஸ்வரரை வழிபட்டார். கவுதமருக்கு இறைவன் பாவ விமோசனம் அளித்தார். மகாமக குளத்தில் நீராடி பாவம் நீங்கியது. கவுதமருக்கு பாவ விமோசனம் அளித்ததால் இறைவனுக்கு கவுதமேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.
சிறப்பம்சம்: இந்த கோயிலில் நர்த்தனகணபதி, மகா கணபதி, தெட்சிணாமூர்த்தி, கவுதம மகரிஷி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், கஜலட்சுமி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், உபவேதநாதேஸ்வரர், சவுந்தரநாயகி அம்பாள், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சி தருகின்றனர். அஷ்டமியில் இத்தலத்தில் உள்ள பைரவருக்கு பூஜை செய்து பயம் நீங்கப்பெறலாம். நவக்கிரக சன்னதி நீங்கலாக சனிக்கும் சூரியனுக்கும் தனிச்சிலைகள் உள்ளன. பைரவரின் அருகே கஜலட்சுமியும், சரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர். 12 ராசிகளில் விருச்சிக ராசிக்குரிய கோயிலாக இது கருதப்படுகிறது. விருச்சிக ராசி அன்பர்கள் இத்தலத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்து சிரமங்கள் நீங்கப்பெறலாம். இக்கோயிலுக்கு பசு தானம் செய்வதன் மூலம் பசுதோஷம் நீங்கப் பெறலாம். இதனால் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும்.
திருவிழா: மகாமகத்தை ஒட்டி தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.
இருப்பிடம்: கும்பகோணம் மகாமக குளத்தின் தெற்கு கரையில் அமைந்துள்ளது.