பதிவு செய்த நாள்
12
பிப்
2016
01:02
சேலம்: கும்பகோணத்தில் நடக்கும் மகாமக திருவிழாவில், பாதுகாப்பு பணிகளுக்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து, தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படையைச் சேர்ந்த, 3,000 பேர்
அழைக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் பிரம்ம தீர்த்தேச்சுரர் கோவிலின் மகாமக விழா, பிப்.,12 துவங்கி , பிப்.,24 வரை
நடக்கிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த
விழாவில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும்,
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், முதல் கட்டமாக ,10 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவவும், பாதுகாப்பு, போக்குவரத்து பணிகளை சரி செய்யும் வகையில், தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படையினர், 3,000 பேரை பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான அழைப்பு, நேற்று அந்தந்த மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு வந்துள்ளது. சேலம் மாநகரில் 80, சேலம் மாவட்டம் 100, தர்மபுரி 100, கிருஷ்ணகிரி 100 என, சேலம் சரகத்தில் இருந்து, 380 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.