பதிவு செய்த நாள்
17
பிப்
2016
11:02
திருத்தணி : திருத்தணி நகரில் உள்ள, திருப்பதி தேவஸ்தான இடத்தில், பக்தர்கள் தங்குவதற்கு இலவச விடுதி மற்றும் 50 ரூபாய் டோக்கன் வழங்கும் நிலையம் கொண்டு வர வேண்டும் என, ஸ்ரீகோவிந்தா சேவை சங்கத்தினர், தேவஸ்தான அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருப்பதி - திருமலை தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு நேற்று காலை, திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அவர், மொட்டை அடித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபட்டார்.அப்போது, திருத்தணியில் இயங்கி வரும் ஸ்ரீகோவிந்தா
பக்தர்கள் சேவை மைய சங்கம் சார்பில், திருமலை முதன்மை நிர்வாக அதிகாரியிடம்
கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: திருத்தணி, ம.பொ.சி. சாலை, நகராட்சி அலுவலகம் எதிரில், ஒரு லட்சம் சதுர அடியில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை பராமரிக்காமல் முட்செடிகள் வளர்ந்து வீணாக உள்ளது.அந்த இடத்தில் ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு மண்டபம் அல்லது குடில்கள் ஏற்படுத்த வேண்டும். மேலும், 50 ரூபாய் டோக்கன் கட்டும் அலுவலகம் கொண்டு வர வேண்டும். இதுதவிர, திருமலையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தான தகவல் மையமும் அமைக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக அதிகாரி, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.