பதிவு செய்த நாள்
18
பிப்
2016
10:02
புதுச்சேரி: அரசு பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், கல்விக்கு அதிபதியான முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோவிலில், மாணவ, மாணவியர் குவிந்து வருகின்றனர். இறைவனின் முதல் அவதாரம் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரமாகும். பிரம்மாவிடம் இருந்து திருடி ஒளித்து வைக்கப்பட்ட வேதத்தை, மது, கைபர்கள் என்ற இரண்டு அரக்கர்களை அழித்து, மீட்டு கொடுத்தார் ஹயக்ரீவர். வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் அனைத்துக்கும் அதிபதியாவார். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, வியாசர், சுப்ரமணியர், விநாயகர் ஆகியோர், ஹயக்ரீவர் அனுக்கிரகத்தால் கல்விக்கு அதிபதி என்ற புகழை பெற்றார்கள் என்பது ஐதீகம்.
கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் அதிபதியான ஹயக்ரீவர் பெருமானை மாணவ, மாணவியர் தினமும் வழிபட்டால், மனதில் தெளிவு, ஞாபக சக்தி, மேலோங்கி, கல்வி செல்வம் பெருகும். அந்த வகையில், பள்ளி முதல் கல்லுாரி வரை படிக்கும் மாணவ, மாணவியர், ஹயக்ரீவரை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முக்கியமாக, தேர்வு நேரங்களில் இக்கோவில்களில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், மாணவ மாணவியர் அதிக அளவில், வழிபட்டு வருகின்றனர். உலகிலேயே ஹயக்ரீவருக்கு இங்குதான் முதல் முதலில் கோவில் 1971ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும், ஆவணி திருவோணம் ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தினங்களில் மாணவ, மாணவியரின் கல்வி வளம் சிறக்க தொடர்ந்து 108 தினங்களுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. மேலும், புதன்கிழமை தோறும் கல்வி வளம் சிறக்க, சிறப்பு வழிபாடு நடக்கிறது.