பதிவு செய்த நாள்
22
பிப்
2016
01:02
உடுமலை: திருமூர்த்தி மலையில் வீற்றிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது; வரும் 26ம் தேதி காலை, மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
ஜோதிக் கம்பம்: அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில், அமணலிங்கேஸ்வரர் சன்னதி முன்புறமாக சிறிது துாரத்தில், 30 அடி உயரமுள்ள, ஜோதிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பத்தின் அடிப்பாகத்தில், அட்ட திக்குகளையும் நோக்கியவாறு சுற்றிலும் பத்ரகாளி, வனதுர்க்கா தேவி, விசாலாட்சி ஆகிய, மூன்று சக்தி மும்மூர்த்தங்களும், ஊர்த்தவதாண்டவர், அகோர வீர பத்திரர் ஆகிய இரண்டு சிவ மூர்த்தங்களும், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் ஆகிய, மூன்று வைணவ மூர்த்தங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கார்த்திகை திருவிழாவன்று இந்த கம்பத்தில், பக்தர்கள் முன்னிலையில், ஜோதி ஏற்றப்படுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, உடுமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கியிருந்து, ஜோதி தரிசனம் கண்டு, வழிபட்டு செல்கின்றனர். பாளையப்பட்டு காலத்தில், ராமாயணம் கதை நிகழ்ச்சிகளும், வைணவ கோவில் திருப்பணிகளும் அதிகமாக நடந்துள்ளன. அந்தக் காலகட்டத்தில்தான் மேற்குறிப்பிட்ட வைணவ மூர்த்தங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஜோதிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள, சிவ மூர்த்தங்களும், வைணவ மூர்த்தங்களும் அக்காலத்தில், சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது.
சுப்ரமணிய சுவாமி கோவில்: மலையும் மலையை சார்ந்த இடமும் குறிஞ்சி. அக்குறிஞ்சிக்கு வேந்தன் குமரக் கடவுள். குன்றி ருக்கும் இடமெல்லாம் குமரனிருக்குமிடம். அவ்வாறிருக்க, மும்மூர்த்திகளும் வீற்றிருக்கும் திருமூர்த்திமலையில் திருக்குமரக்கடவுளுக்கும் கோவில் உள்ளது. இக்கோவிலில், அழகு முகிழ் தமிழ்க்கடவுள், இங்கு பாலசுப்ர மணியராக காட்சியளிக்கிறார். ஒவ்வொரு கிருத்திகை நாளன்றும், கார் மயில் வாகனத்தில், பாலசுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முருகனுக்குரிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.