பதிவு செய்த நாள்
25
பிப்
2016
10:02
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது. பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
21ம் தேதி, மயானப் பூஜை, 22ம் தேதி, சக்தி கும்பஸ்தாபனம், மகா பூஜை, நேற்று மாலை, சித்திர தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தன. நேற்று காலை, தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளி குப்புச்சாமி, மயான அருளாளி அருண் ஆகியோர், அம்மனின் சூலத்துடன் கோவிலை வலம் வந்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சப்-கலெக்டர் காயத்ரி, அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், உதவி கமிஷனர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., முத்துராஜன் தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தீயணைப்புத் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வெள்ளத்தால், இப்பகுதியே விழாக்கோலம் கண்டது.