பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
பழநி: கோவை மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் இருந்து பழநி திரும்பிய கோயில் யானை கஸ்துாரி 150 கிலோ எடை குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்காக ஜன., 6ல் பழநி பெரியநாயகியம்மன் கோயில் யானை கஸ்துாரி அழைத்துச் செல்லப்பட்டது. 49வயதான கஸ்துாரி புத்துணர்வு முகாமிற்கு சென்றபோது மொத்த எடை 4,740 கிலோவாக இருந்தது. தற்போது 150 கிலோ எடை குறைந்து 4,590 கிலோவாக உள்ளது.நேற்று காலை 10 மணிக்கு பழநி வந்த கஸ்துாரிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் தங்க முலாம் பட்டை அணிவிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்தனர். பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.கோயில் வெளிப்பிரகாரத்திலுள்ள கொடிமரம் அருகே கஸ்துாரி யானைக்கு தீபாராதனை நடந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், மருத்துவர்கள் சக்திவேல்பாண்டி, சுரேஷ் ஆகியோர் வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட உணவுபொருட்களை வழங்கினர். அதன்பின் வழக்கமான இடத்திற்கு கஸ்துாரி அழைத்து செல்லப்பட்டது.
இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில்,“ புத்துணர்வு முகாமில் நாள்தோறும் உடற்பயிற்சி, இயற்கை முறையில் சத்தான உணவு வழங்கல் போன்ற காரணங்களால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, கஸ்துாரி புத்துணர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. தினமும் 3 கிலோ அரிசி, 2 கிலோ பாசிப்பயிறு, 1 கிலோ கொள்ளுப்பயிறு கலந்த சத்தானஉணவு வழங்க அறிவுறுத்தியுள்ளனர். கடந்தாண்டை போல முகாமில் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் யானை கஸ்துாரி வெற்றி பெற்று கழுத்தில் அணிவிக்கும் மணியை பரிசாக பெற்றுள்ளது,” என்றார்.