பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
திருமூர்த்திமலை: அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழாவில், இன்று காலை, 7:30 மணி முதல், சிவாச்சாரியார் வழிபாடு, வேதபாராயணம், தேவார இன்னிசை, இரண்டாம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, பாவனாபிேஷகம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, வேதபாராயணம், தேவார பாடல்கள் பாடப்படுகின்றன. தொடர்ந்து, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது; நாளை காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள், கும்பாபிேஷகம் கோலாகலமாக நடக்கிறது. கோவில் ஆண்டு திருவிழாவில் பூலாங்கிணர் சப்பரம் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தி திதியில் வரும் மகாசிவராத்திரி நாள், இத்திருக்கோவிலின் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி அன்று நான்கு யாம கால பூஜைகள் வெகு சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. மகா சிவராத்திரி நாளன்று இரவு, 8:00 மணிக்கு கோவிலில், புண்யாகவாசனம், முதற்கால பூஜை, அபிேஷகம், தீபாராதனையும், இரவு, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, அபி ேஷகம், தீபாராதனையும், நள்ளிரவு, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனையும் நடக்கின்றன. இத்துடன், மாலை முதல் மறுநாள் காலை வரை, கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, வழக்காடு மன்றம், இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இரவு முழுவதும் கோவில் வளாகத்தில் தங்கி கண் விழித்து, நீராடி, விரதமிருந்து, கால பூஜைகளில் பங்கேற்று சிவனருள் பெற, பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். மகா சிவராத்திரியன்று மாலை, உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் என்ற ஊரில் இருந்து, சப்பரம் செய்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. கோவிலுக்கு கொண்டுவரப்படும் சப்பரம் அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலஸ்தான கட்டடத்தின் மேல் வைக்கப்படுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் மற்றும் தை மாதம் வரும் அமாவாசை நாட்களில், ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் கோவிலுக்கு வந்து, தோணி நதியில் நீராடி இறைவனை தரிசித்து செல்கின்றனர். இதேபோல், தமிழ் புத்தாண்டு தினம் மற்றும் ஆடிப்பெருக்கு நாட்களிலும், ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும், அதிகளவிலான பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கின்றனர். இக்கோவில் உடுமலை நகரில் இருந்து, 21 கி.மீ., துாரத்தில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பக்தர்களின் வசதிக்காகவும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், தினமும் காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, வழிபாட்டுக்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது; தினமும், மூன்று கால பூஜைகள் நடக்கிறது.
அன்னதான திட்டம்: பல்வேறு சிறப்பு பெற்ற திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அன்னதான திட்டம், 2004 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில், 2,000 ரூபாய் நன்கொடை அளித்து, ஒருநாள் அன்னதான கட்டளைதாரராகலாம்; 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தி, ஆண்டுக்கு ஒரு நாள் அன்னதானம் வழங்கும் நிரந்தர கட்டளைதாரராகலாம். ராகு, கேது, தோஷப்பரிகாரங்களுக்கும், ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, இயற்கை எய்தியவர்களுக்கு திதி செய்வதற்கும், இந்த அன்னதான திட்டத்தில் சேர்ந்து, ஏராளமானோர் அன்னதானம் வழங்கியுள்ளனர்.