பதிவு செய்த நாள்
19
மார்
2016
11:03
திருப்பதி: திருமலை பாதுகாப்பிற்காக, நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்து வருவதால், பாதுகாப்பை பலப்படுத்த, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். அதன்படி, திருப்பதி, திருமலையில், மூன்று கட்டங்களாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, 37 பகுதிகளில், 200 கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது. மக்கள் கூடும் பஸ், ரயில் நிலையங்கள், திருமலை, திருப்பதி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் உள்ள கோவில்கள், திருப்பதியில் இருந்து வெளி மாநிலம் செல்லும் முக்கிய சாலை மார்க்கங்களிலும், நவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக, 400 கேமராக்களும், மூன்றாம் கட்டமாக, 300 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன. இரவு நேரத்திலும், இந்த கேமராக்களில், பதிவுகள் துல்லியமாக இருக்கும் என்பதால், பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.