பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
12:04
திருப்பரங்குன்றம் : தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகள் முடிந்து அன்னதானம், பக்தர்கள் இழுக்க இலவச தங்க ரதஉலா, திருவிளக்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.விவசாயிகள் நேற்று காலை தங்களது குழந்தைகளுடன் புதிய தார் குச்சி நுனியில் பூ சுற்றி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மலையை சுற்றிவந்து 4 ஏர்களில் மாடுகள் பூட்டி தென்பரங்குன்றத்திலுள்ள கோயில் நிலங்களை உழுதனர்.கல்வெட்டு குகை கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி, திருவிழா கொண்டாட்டம், விவசாயம் குறித்தும், தொழில்களுக்கான கூலி நிர்ணயம் குறித்து ஆலோசித்தனர். பஞ்சாங்கம் வாசித்தல்: கோயில் திருவாட்சி மண்டபத்தில் இரவு, பக்தர்கள் முன்னிலையில் இந்த ஆண்டு மழை, கோயில் முக்கிய திருவிழாக்கள் உட்பட நடப்பு ஆண்டு சாதக பாதக பலன்கள் குறித்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.