பதிவு செய்த நாள்
28
ஏப்
2016
11:04
உடுமலை: பிரசித்தி பெற்ற, உடுமலை மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் இன்று மாலை கோலாகலத்துடன் நடக்க இருக்கிறது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்., 12ல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்., 19ம் தேதி திருவிழா கம்பமும், ஏப்., 22ம் தேதி கொடியேற்றமும் நடந்தன. நோன்பு சாட்டுதலையடுத்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன. கம்பம் போடப்பட்டபின், பக்தர்கள் கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். கொடியேற்றத்தை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் இரவு வரை, பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக் கடன் செய்தனர். காலை, மாலை இருவேளையும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு நாளும் இரவு, 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று அதிகாலை, அபிேஷகம், ஆராதனைகள் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று மாலை அம்மனுக்கும், சூலத்தேவருக்கும் மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, யாக பூஜைகள் நடந்தன; மாலை, 4:00 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூலத்தேவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, காலை, 7:00 மணிக்கு, அம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். பிற்பகல், 3:15 மணிக்கு, பரிவட்டம் கட்டப்படுகிறது. மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது. திருத்தேர் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கோவில் வளாகத்தில் துவங்கி, தளி ரோடு, குட்டைத்திடல், தங்கம்மாள் ஓடை தல கொண்டம்மன் கோவில் வழியாக, பொள்ளாச்சி ரோட்டை அடைந்து, மீண்டும் கோவிலை வந்தடைகிறது.
பலத்த பாதுகாப்பு: பிரசித்தி பெற்ற உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை காண, உடுமலை நகர் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி கிராம மக்களுடன், வெளியூரில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் என, பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்: தேரோட்டத்தையொட்டி, நகரில் முக்கிய ரோடுகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம், 2:00 மணியில் இருந்து மாலை, 6:00 மணி வரை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் சிக்னலில் இருந்து பிரிந்து, ராஜேந்திரா ரோடு வழியாக சென்று ராமசாமி நகர், அரசு கலைக் கல்லுாரி, எலையமுத்துார் பிரிவு, போடிபட்டி, வாளவாடி வழியாக பொள்ளாச்சி ரோட்டை அடைய வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை நோக்கி வரும் வாகனங்கள், முக்கோணத்தில் இருந்து பிரிந்து, வாளவாடி வழியாக, திருமூர்த்திமலை ரோட்டை அடைந்து அங்கிருந்து உடுமலை நகருக்குள் வரவேண்டும். போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தும் வகையில் நகர் எல்லைகளில் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்படுவர்.
வாணவேடிக்கை நிகழ்ச்சி: தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை இரவு, 10:00 மணிக்கு, குட்டைத்திடலில், வாணவேடிக்கை நிகழ்ச்சி நடப்பதாக, மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சங்கரசுந்தரேசுவரன் தெரிவித்தார்.
தேரின் அமைப்பு: அண்டத்தையும், மனித சரீரத்தையும் குறிப்பிடும் வகையில் தேரின் அமைப்பு உள்ளது. எட்டு அடுக்குகளில், உச்சியிலிருக்கும் கும்பம் சோட சாந்தம், நடுவில் இருக்கும் துாண்கள் தத்துவங்கள், இரு குதிரைகள் சூரியன், சந்திரன், பத்து சக்கரங்கள் தசவாயுக்களை குறிப்பிடும் வகையாகவும், குண்டலினி, நாபி, இருதயம், கழுத்து, மத்திய ஸ்தானம், மஸ்தக ஆதிஸ்தானம், துவாதசந்தம் என எட்டு அடுக்குகளாக தேர் வடிவமைக்கப்பட்டு இன்று மாலை தேரோட்டத்துக்கு தயாராக உள்ளது. தேர்த்திருவிழாவை கொண்டாடும் வகையில், குட்டை திடலில், நடக்கும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில், மக்கள் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர். கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடுமலையில் உள்ள பல்வேறு அமைப்புகள், வர்த்தகர்கள், தன்னார்வலர்கள், உடுமலை பிராமண மகா சங்கம் மற்றும் உபாசனா உள்ளிட்டோர் நகரில் ஆங்காங்கே பந்தல் அமைத்து, நீர்மோர், தண்ணீர் வழங்கி வருகின்றனர்.