இயற்கை வழிபாட்டு முறையில் பாம்பு புற்றினை வழிபடுவது பழங்காலம் முதலே இருந்து வருகிறது. நாகப்பாம்பினை அம்பிகையின் அம்சமாகக் கருதி வணங்குவர். அம்மன் கோவில்களில் நாகமே காவல் புரிவதாகவும், அம்பிகையின் குடையாக இருப்பதாகவும் கூறுவர். மாரியம்மன் கோவில்களில் உள்ள புற்றினை புற்று மாரியம்மன் என்று குறிப்பிடுவர். ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு புற்று மண்ணையே பிரசாதமாக நெற்றியில் பூசிக் கொள்வர். ஆடிமாத வளர்பிறை சதுர்த்தியான நாகசதுர்த்தியில் புற்றுக்கு பால் விடுதல், பொங்கல் வைத்தல் ஆகிய வழிபாட்டை இந்நாளில் மேற்கொள்வதால் நாக, சர்ப்பதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.
நாகராஜர், நாகராணி வழிபாடு இந்தியாவில் பிரசித்தம். பாம்பு குப்பை மேடுகளில் ஒளிந்து வாழும். மண் நிறைந்த புற்றுகளில் வசிக்கும். இவ்வாறு குப்பையிலோ, மண்ணிலோ புரண்டாலும் அதன் மீது அழுக்கு ஒட்டுவதில்லை. மனிதனும் உலக இன்பங்கள் என்னும் குப்பையில் உழல நேர்ந்தாலும், அதனால் ஏற்படும் உள்ளத்து மாசை உதற வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே நாகராஜர் வழிபாடு ஏற்பட்டது.