தாண்டிக்குடி: அ(சி)வனின்றி அணுவும் அசையாது என ஆன்மிக பெரியோர்கள் கூறுவர். கைலாயம் முதல் திருவண்ணாமலை வரை உள்ள கோயில்களில் லிங்கம் வடிவாகவே சிவன் காட்சி தருகிறார். இதில் வேறுபட்டது தாண்டிக்குடி மலையில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டது அரசன்கொடை கதவு மலைநாதன் கோயில். இதனடிவாரம் பாயும் ஆறுகளால் காமராஜர் நீர்த்தேக்கம், பரப்பலாறு, மஞ்சளாறு, அமராவதி அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது. மலை முகடுகளுக்குள் சரிவான அடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோயில். ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு பிறப்பு அன்று தமிழகத்தின் கடைகோடியிலிருந்து நடைபயணமாக இக்கோயிலுக்கு பக்தர்கள் வருவர். பவுர்ணமி தினங்களும் விசேஷ தினங்கள்தான். தாண்டிக்குடி, பாச்சலுார், வடகவுஞ்சி பகுதியிலிருந்து ஆறு கி.மீ., தொலைவில் இக்கோயில் உள்ளது. ரோடு வசதியில்லாததால் நடைபயணமாக கோயிலை அடையலாம். இங்கு ஏராளமான குகை, பாறை ஓவியங்கள் உள்ளன. இன்று வரை இங்கு சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இக்கோயிலை சுற்றி அரிய மூலிகைகள் உள்ளன. இக்கோயிலில் சிவன் லிங்கமாக இல்லாமல் சிலை வடிவாக காட்சி தருவதே சிறப்பு. இந்தமலையின் இருபுறமும் கதவுகள் போன்ற தோற்றம் கொண்டதால் கதவுமலை நாதன் என்ற பெயருடன் விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து செல்வோருக்கு நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதுதொடர்பான விவரங்களுக்கு 9787245105ல் தொடர்பு கொள்ளலாம்.