ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் போல் சிவனுக்கு சிராவண (ஆவணி) மாதம். இதை சாவன் என்றும் அழைக்கிறார்கள். பீஹார் மாநிலத்தில் தேவ்கர் நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழியும் புண்ணிய காலம் இது. வருண பகவான் பூமாதேவியை மழையால் அபிஷேகம் செய்து பசுமை ஆடை கொண்டு அலங்கரிக்கும் பருவம். தேவ்கர் இதை வைத்யநாத் என்றும் அழைப்பர். பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பீஹார் மக்களின் மிகவும் முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்று. சுல்தான் கஞ்ச் என்ற இடத்தில் இருந்து இரு கலசங்களில் கங்கை நீரை நிரப்பி காவடி போல தோளில் சுமந்து கால்நடையாக பயணம் செய்து, வைத்தியநாதனுக்கு, தேவ்கரில் அபிஷேகம் செய்கிறார்கள். இந்தக் காவடியை அதற்கென அமைக்கப்படும் இடங்களில்தான் வைக்க முடியும். துவராடை அணிந்து, காலில் செருப்பு அணியாமல், மழையிலும் வெயிலிலும் பம்பம் போலே என்று முழங்கிக் கொண்டு செல்லும் யாத்ரீகர்களைக் காணும்பொழுது நமக்கு மெய்சிலிர்க்கும். தன்பாதில் இருந்து பாட்னா செல்லும் வழியில் ஜெசூடி என்ற இடத்தில் இறங்கி வைத்தியநாத் தாம் (தேவ்கர்) செல்ல வேண்டும்.