பதிவு செய்த நாள்
03
மே
2016
11:05
புதுடில்லி: சபரிமலை கோவிலில், 10 முதல், 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கோவிலுக்கு வருவது அய்யப்பனுக்கு பிடிக்காது; இது, 1,000 ஆண்டு கால பாரம்பரியம்; பெண்களுக்கு தடை விதிக்கவில்லை, கட்டுப்பாடு தான் விதிக்கப்பட்டுள்ளது என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது, உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கு செல்ல, 10 முதல், 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை கோவிலில் பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, வி.கோபால கவுடா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என, அமர்வு பலமுறை கேள்வி எழுப்பியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆண், பெண் பாகுபாடு பார்க்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நேற்று வாதிட்டார். அப்போது, பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பது குறித்து, அவர் விளக்கம் அளித்தார். வழக்கு விசாரணை, 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு பெண்கள் வருவது அய்யப்பனுக்கு பிடிக்காதென தேவசம் போர்டு கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தடையில்லை; கட்டுப்பாடு: தன் வாதத்தின் போது, மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறியதாவது: அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி; சபரிமலைக்கு பெண்கள் வருவதை அவர், விரும்பவில்லை. 1,000 ஆண்டுகளாக உள்ள இந்த பாரம்பரிய வழக்கத்தில், மத ரீதியிலான நம்பிக்கையில் யாரும் தலையிட முடியாது.வனப்பகுதியில், மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்குள், 10 முதல், 50 வயதுள்ள பெண்கள் நுழைவதற்கு கட்டுப்பாடு உள்ளது. தன் பிரம்மச்சரியத்துக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதால் தான், வனப் பகுதியில், மலையின் மேல் அமர்ந்துள்ளார் அய்யப்பன்; கோவிலுக்கு பெண்கள் வருவதை அவர் விரும்பவில்லை. இந்த மத ரீதியிலான நடைமுறையை, பெண்களுக்கு எதிரான பாகுபாடாக பார்க்கக் கூடாது.கேரளாவில் உள்ள மற்ற அய்யப்பன் கோவில்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின், 25வது பிரிவின்படி, கோவிலை பராமரிக்கும் உரிமை கோவில் நிர்வாகத்துக்கு உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்களின் மத நம்பிக்கையில், கோர்ட்டுகள் தலையிட முடியாது. அய்யப்ப பக்தர்கள், 41 நாட்களுக்கு கடுமையான விரதம் இருக்கின்றனர்;
அவர்களுடைய இந்த மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. ஏதோ ஒரு உள்நோக்கத்தில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.பெண்களுக்கு அனுமதி மறுப்பதை, பாகுபாடாகக் கருதக் கூடாது; அது ஒரு கட்டுப்பாடு தான். 10 முதல், 50 வயதுள்ள பெண்கள் வருவதை, அய்யப்பனே விரும்பாதபோது, கோர்ட் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? சபரிமலை கோவில் நடைமுறையில் தலையிடுவதன் மூலம், கோர்ட் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். மற்ற மதங்களிலும் தலையிட வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அவர் வாதிட்டார். உங்களுடைய நம்பிக்கை குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. உங்களுக்கு ஏற்ப தனி பூஜைகள் வைத்துக் கொள்ளுங்கள்; அதில் தலையிட மாட்டோம். ஆனால், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களில், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான இந்த நடவடிக்கையை, அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறதா? பெண்களில் ஒரு குறிப்பிட்ட வயது பிரிவினருக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏற்புடையது அல்ல.-நீதிபதி மிஸ்ரா