பதிவு செய்த நாள்
09
மே
2016
12:05
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செடில் உற்சவத்தை முன்னிட்டு நடந்த திருத்தேர் வீதியுலாவில்,கலெக்டர் பழனிசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகையில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற பழமையான நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிர்மோத்ஸவ விழா கடந்த 29 ம் தேதி,பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.நாள் தோறும் அம்பாள் அம்ச,மயில்,பூத,சேஷ,சிம்ம,யானை,குதிரை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று செடில் உற்சவத்தை முன்னிட்டு,அம்பாள் நேற்று முன்தினம் இரவு தேரில் எழுந்தருளினார்.நேற்று காலை,கலெக்டர் பழனிசாமி,தேரை வடம்பிடித்து தேர் வீதியுலாவை துவக்கி வைத்தார்.தேரில் எழுந்தருளிய அம்பாள்,முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து செடில் உற்சவம் நடந்தது.செடில் உற்சவத்தை முன்னிட்டு,கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது.செடில் மற்றும் திருத்தேர் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.