ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆட்சி செய்த மகேந்திர பல்லவனின் ஆட்சிக்கு முன்னதாக செங்கல், மரத்தால் தான் கோயில்கள் எழுப்பப் பட்டன. மகேந்திரவர்ம பல்லவர் தான் முதல் கற்கோயில் எடுத்தவர். அதாவது, பாறைகளை வெட்டி துண்டுகளாக்கி இவர் கோயில் கட்டவில்லை. மலையைக் குடைந்து செதுக்கி கோயிலாக்கினான். எட்டாம் நூற்றாண்டில் வந்த இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்ம பல்லவன் தான், பாறைகளை துண்டுகளாக்கி கோயில் கட்டினான். அவ்வாறு எழுப்பப்பட்ட முதல் கோயில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில். அவ்வகையில், முதல் கற்கோயிலாக இதை எடுத்துக் கொள்ளலாம். குன்றுகளைக் குடைந்த கோயிலை குடைவரைக் கோயில் என்றும், பாறைகளைத் துண்டுகளாக்கி எழு ப்பிய கோயிலை கட்டடக்கோயில் என்றும் சொல்வர். இதற்கு கற்றளி,கல்தளி என்ற பெயரும் உண்டு. தளி என்றால் கோயில்.