23.06.2016 மாலை 5.18 மணி முதல் 24.6.16 மாலை 4.16 வரை சங்கடஹர சதுர்த்தி தினமாகும். நம் சங்கடங்களை களைவதற்காகவே நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். சந்திரன், விநாயகரை நோக்கி தவம் இருந்து அவரது அருளைப் பெற்று சந்திரனுக்கு விநாயகர் தரிசனம் தந்தநாள் மாசி மாதம் தேய்பிறை முடிந்து 4-ம் நாள் ஆகும். இதைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். தேய்பிறைச் சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருக்க வேண்டும். மேலும் அந்த நாள் செவ்வாய்க்கிழமை யாக அமைந்து விட்டால் மிகவும் சிறப்பு. அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள். அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான். அதனால் தான் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாக சொல்லப்படுகிறது. சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடம் நீங்கிய தாலேயே இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று பெயர் பெற்றதாக ஐதீகம்.
மேலும் சங்கடஹர சதுர்த்தி பற்றி கூறப்படும் இன்னொரு விளக்கமானது
கஷ்டம் என்பது வறுமை, இல்லாமை என்று செந்தமிழில் சொல்லப்படுகிறது. சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்=சங்கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப் படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கட்டமாகி கடைசியில் சங்கடமாக உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடம் என்றால் இதுதான் அர்த்தம். இந்த சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். பிரதிமாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான் பொருள். தேய்ப்பிறை நாளில் தேயும் பொழுதில் இருள் கவ்வும் மாலை நேரத்தில் வருவதே இந்த சங்கடஹர சதுர்த்தி. நமக்கு வரும் துன்பங்களை தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு பூஜையே இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜை. இந்நந்நாளில் விநாயகரை உள்ளன்புடன் வழிபட்டு நலன்கள் பல பெறுவோம்.