நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் அவர்பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உலகம் உய்விக்க வந்த பெருமானாரான அவர் பொறுமையின் சிகரமாக விளங்கினார். அவர்களுக்கு ஐம்பது வயதான நிலையில் அவரது துணைவியார் கதீஜா அம்மையாரும், பெரிய தந்தையார் அபிதாலிப்பும் மறைந்தார்கள். அபிதாலிப் அவர்கள் இருக்கும் வரை நாயகத்தின் அருகில் நெருங்கவே பயந்த எதிரிகள் எல்லாம், அதன்பிறகு அவருக்கு தந்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு பகைவன் நாயகம்(ஸல்) அவர்களின் மீது செத்த ஒட்டகத்தின் குடலை வீசி எறிந்தான். “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவிதேடுங்கள், என்று சொன்ன நாயகம்(ஸல்) அவர்கள், மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டுமல்லவா? எனவே, இதை பொருட்படுத்தாமல் அமைதி காத்தார்கள்.
இந்தப் பொறுமை எதிரிகளுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்தது. ஒருமுறை ஒருவன் நாயகம் (ஸல்) அவர்களின் மீது புழுதிவாரி துõற்றினான். நாயகம் அவர்களும் அவனை எதுவும் சொல்லவில்லை. தலையிலும், உடலிலும் புழுதிபடிய வீடு திரும்பினார்கள். அவர்களது நிலையைக் கண்டு கலங்கிய திருமகளார் பாத்திமா அவர்கள், பெரும் கலக்கத்துடன் தந்தையின் உடலைக் கழுவிவிட்டார்கள். மகளிடம் நாயகம்(ஸல்) அவர்கள்,“ என் அன்பு மகளே! இதற்காக அழ வேண்டாம், இறைவன் உன் தந்தையைக் காப்பாற்றுவான், என்றார்கள். பொறுமை இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.