ஷிர்டி பாபாவின் பொக்கிஷமான செப்புக்காசு சென்னை வருகிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2016 11:07
சென்னை: பாபாவின் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவர் வாமன் ராவ் .இவரிடம் ஒரு செப்புக்காசு வந்து சேர்ந்தது.அந்தக் காசில் ஒரு புறம் ராமர்,லட்சுமணர்,சீதை உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. மறுபக்கம் சஞ்சீவி மலையை கையில் தூக்கியபடி இருக்கும் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது.நாணயத்தின் இருபக்கமும் அந்த செப்புக்காசு அச்சடிக்கப்பட்டது 1918ம் ஆண்டு என்று குறிக்கப்பட்டு இருந்தது. இது நாணயமாகவும் இருக்கலாம் அல்லது தனியாரால் உருவாக்கப்பட்ட செப்பு வில்லையாகவும் இருக்கலாம். ஆனால் அதன் அழகும் அமைப்பும் அற்புதமாக தெய்வீகம் கமழ இருந்தது.
இந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு பாபாவிடம் கொடுத்து ஆசீர்வாதித்து தருமாறு கேட்டுக்கொண்டார்.வழக்கமாக எதைக்கொடுத்தாலும் அதை உதீயுடன்(திருநீறு போன்ற சாம்பல்)சேர்த்து ஆசீர்வாதித்து கொடுத்துவிடும் பாபா அந்த நாணயத்தை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு தன் ஜிப்பா பையில் போட்டுக்கொண்டார். எதற்குமே ஆசைப்படாத பாபா ஆர்வமாக வைத்துக்கொண்ட அந்த செப்புக்காசை பின் தன் இன்னோரு பக்தர் ஷாமா என்பவரிடம் கொடுத்து ‘இது ஒரு பொக்கிஷம் உன் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடு’ என்று சொல்லி கொடுத்தார். அதன் பிறகு ஷாமாவாலும் பின் அவரது சந்ததியினராலும் பாதுகாக்கப்பட்டு இதுநாள் வரை வழிபடப்பட்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் 60ற்கும் மேற்பட்ட முறை ஷீரடி சென்று வந்தவரும், சென்னை தி.நகர்,சரோஜினி தெருவில் இயங்கிவரும் ஷீரடி சாயிபாபா தியான மையத்தின் நிர்வாக அறங்காவலருமான திருவள்ளுவன்,பாபா பொக்கிஷமாக போற்றிய இந்த செப்புக்காசை சென்னைக்கு கொண்டுவந்து இங்குள்ள பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கவேண்டும் என்று விரும்பினார்.
இது குறித்து ஷாமா குடும்பத்தினரிடம் பேசி சம்மதிக்க வைத்ததில் பாபா போற்றிய அந்த பொக்கிஷமான செப்புக்காசு சென்னை வருகிறது.வருகின்ற 17/7/2016 ந்தேதி முதல் 19/7/2016 வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு வைக்கப்படும்.19ந்தேதி குரு பூர்ணிமா தினத்தன்று இதற்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.இது தொடர்பான கூடுதல் விவரத்திற்கு திருவள்ளுவனை தொடர்பு கொள்ளவும் எண்:9444453777.