பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
தேனி: தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பெரியகுளம்: பெரியகுளத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டனர். பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, பெருமாள், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
* லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில், உற்சவர் லட்சுமிநாராயணப்பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. * பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோபூஜையில் துவங்கி, மகாமந்திர நாம கீர்த்தனம் உள்ளிட்டவை நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், கிருஷ்ணரை தலையில் சுமந்தபடி வீதி உலா சென்றார். தொடர்ந்து கிருஷ்ணருக்கு விசேஷ திருமஞ்சனம், 52 கோடி ராமநாமத்திற்கு சிறப்பு பூஜை, கிருஷ்ணலீலைகள் உபன்யாஸம் நடந்தது. கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஸ்ரீ குருஜியின் கீர்த்தனைகள், குழந்தைகளுக்கான அலங்காரப் போட்டி, கிருஷ்ணன் புறப்பாடு மகமாந்திர நகர கீர்த்தனம், டோலோத்ஸவம் ஆகிய 8 வகையான நிகழ்ச்சிகள் நடந்தது. சிறுவர், சிறுமியர் கிருஷ்ணன், ராதை வேடத்தில் வந்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.
* போடி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சிறுவர்களுக்கு கிருஷ்ணன், ராதை வேடம் அணிவதற்கான போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த வேடமிட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் அருள் பாலித்தார்.