பதிவு செய்த நாள்
29
ஆக
2016
11:08
சேலம்: சேலத்தில், விஜயநகர பேரரசு கால தங்கக்காசு கண்டெடுக்கப்பட்டு உள்ளது, என, சேலம் பாராமஹால் நாணயவியல் சங்கத்தின் இயக்குனர் சுல்தான் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: விஜயநகர பேரரசின் இரண்டாம் ஹரிஹரன், கி.பி., 1377 - 1404 வரை மன்னராக இருந்தார். இந்த கால கட்டத்தில், லட்சுமிநாராயணர், லட்சுமி, நரசிம்மர், சரசுவதி, பிரம்மன் உருவங்கள் பொறித்த தங்கக் காசுகளை மக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளார். அந்த காசுகள், விஜயநகர அரசுகளின் வளர்ச்சியையும், மன்னர்களின் ஆயுட்காலங்களையும் குறிப்பிட்டுள்ளன.
அந்த காசுகளின் எடை, 0.37 மில்லி கிராம். விஜய நகர பேரரசின் தலைநகரமாக இருந்த ஹம்பி, உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. அந்த சிறப்பு கொண்ட தங்கக்காசு, தற்போது சேலத்தில் கண்டெடுக்கப்பட்டு, பாராமஹால் நாணயவியல் சங்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை, வரலாற்று ஆய்வாளர்கள், நாணயவியல் ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.இதுபோன்று, விஜயநகர பேரரசுகளால் வெளியிடப்பட்ட கத்யனா, வராஹன், பொன், பணம், ஹக என்ற காசுகள் உள்ளன. தவிர, ஜிடல் எனும் பெயரில் வெளியிடப்பட்ட வெள்ளிக்காசுகளும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.