பதிவு செய்த நாள்
01
செப்
2016
11:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரத்தில் சேதமடைந்துள்ள நிலைப்படிகளை புதுப்பிக்க, ராட்சத கிரேன் மூலம் மரத்துாண் நிலைப்படியில் நிலைநிறுத்தும் பணி நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள், 25 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கின்றன. இதற்காக, 13 நிலைகளுடன், 217 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. ராஜகோபுரத்தில், மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள நான்காவது துாணின் மேற்கூரையில், 10 டன் எடை கொண்ட பீமில், 4 அடி துாரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்ய, சென்னை, ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல் ஆய்வக உதவி பேராசிரியர், அருண் மேனன் கடந்த, 27ம் தேதி ஆய்வு செய்தார். கோபுரத்தின் விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் ஒட்டி சீர்செய்ய வேண்டும் என, பரிந்துரைத்தார். மேலும், கோபுரத்தின், 13 நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தேக்கு மரத்திலான படிகள் சேதமடைந்துள்ளன; இதை புதுப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தினர். அதன்படி, நிலைப்படிகளில் இலுப்பை மரத்திலான நிலைப்படி தயார் செய்து, கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. இதை நிலைநிறுத்த, 217 அடி உயரமுள்ள கோபுரத்தில், ராட்சத கிரேன் மூலம் மரம் நிலைப்படியில் நிலைநிறுத்தும் பணி நடந்து வருகிறது.